சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, February 28, 2018

சில ஆபத்தான ஷாமனிஸ சடங்கு அனுபவங்கள்!

அமானுஷ்ய ஆன்மிகம் 27 

கை ரைன்ஹால்டு டானர் (Kai (Karl) Reinhold Donner) என்ற பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவருமாவார். அவர் 1911 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரை ரஷியாவில் உள்ள சைபீரியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பழங்குடி மக்களின் சடங்குகளையும், பழக்க வழக்கங்களையும் ஆராய்ந்த போது அவர் அங்கு நடந்த ஒரு சுவாரசிய ஷாமனிஸ சடங்கை இவ்வாறு விவரிக்கிறார்.


”சடங்கு ஆரம்பிக்கும் முன் ஒரு சிறு கூடாரத்தில் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த ஷாமன், அந்தக் கூடாரத்தில் பற்ற வைத்திருந்த விளக்கு தானாய் அணையும் வரை வெளியே வரவில்லை. வெளியே எல்லோரும் அந்த ஷாமனுக்காகக் காத்திருந்தார்கள். கடைசியில் வெளியே வந்த ஷாமன் வெளியே முன்பே பற்ற வைக்கப்பட்டிருந்த நெருப்புக்கு முன் விரித்து வைக்கப்பட்டிருந்த ஒரு கலைமானின் தோலின் மீது அமர்ந்து கொண்டான். வெளியே காத்திருந்த கூட்டத்தில் ஒரு பகுதியினர் அந்தச் சடங்கு நடக்கும் இடத்தைச் சுற்றி நின்று கொண்டார்கள். சிறிது நேரத்தில் அவர்களது சலசலப்பு நின்று பேரமைதி அங்கே நிலவ ஆரம்பித்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த மத்தளத்தை எடுத்து நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டபடி ஷாமன் நெருப்பின் முன் எழுந்து நின்று மறுபடி அங்கு அமர்ந்து கொண்டு தன் தலைக்கு மிருகத் தோலால் ஆன தொப்பியையும் வைத்துக் கொள்கிறான். பின் கொட்டாவி விட ஆரம்பிக்கிறான். சத்தமாகப் பல முறை கொட்டாவி விட்ட பின் அப்படியே படுத்துக் கொள்கிறான். ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து விடும் ஷாமன் பின் விழித்து எழுந்த போது புதிய பிறவியாய் தோன்றுகிறான்.”


“விழித்திருந்தாலும் கூட அவன் இந்த உலகம் குறித்த பிரக்ஞையோடு இல்லை என்பதும் கிட்டத்தட்ட அரைமயக்க நிலையில் இருப்பதும் பார்த்தாலே தெரிகின்றது. மெல்ல எழுந்து நின்று அந்த மத்தளத்தை அடித்தபடி அந்த நெருப்பைச் சுற்றி வந்து ஆட ஆரம்பித்த அவன் பாடவும் செய்கிறான். அவன் குரல் இப்போது அவனுடைய பழைய குரலாக இல்லாமல் முற்றிலும் மாறி இருக்கிறது. அவன் பாடிய பாடல் அங்கு யாவரும் அறிந்த மொழியில் இல்லை. மெல்ல ஆரம்பித்த பாட்டும் மத்தளச் சத்தமும் போகப் போக அதிகமாகிக் கொண்டே போகிறது. அவன் சுற்றி ஆடும் வேகமும் அதிகரித்தபடியே இருக்கிறது. பாடலுக்கு இடையே அவன் பல விதக் குரல்களில் கூக்குரலிடுகிறான். அவை எல்லாம் மனிதக் குரல்களாக இல்லை. விலங்கு, பறவையினங்களின் குரல்களாக இருக்கின்றன. அவன் அழைக்கின்ற அழைப்புக்கு ஆவிகளும் சக்திகளும் கீழிறங்கி வந்தது போலத் தோன்றுகிறது. கூர்ந்து கவனிக்கையில் மத்தளச் சத்தத்தோடும், அவனது வித்தியாசக் குரலோடும் சேர்ந்து விலங்குகளின் ஓட்டங்களும், சத்தங்களும் எதிரொலித்தது போலவே தோன்றியது. ஆனால் எல்லாமே ஒரு தாள லயத்தில் இருந்தது….”



அவர் பழங்கால மொழிகள் உட்பட பலமொழிகள் அறிந்தவர் என்றாலும் அவர் கூட அறியாத ஏதோ ஒரு மொழியில் பாடிய ஷாமன் ஆரம்பித்த சடங்கின் பிற்பகுதியில் மனிதர்களின் பங்கெடுப்பை விட விலங்குகளின் பங்கெடுப்பு அதிகமானது போல் அவர் உணர்ந்தது அவரது அதீத கற்பனை அல்ல. அப்படியே அந்தக் காலங்களில் நடந்தது அந்த உணர்வு நிலையில் இருந்து உண்மைகளை அறியும் ஷாமன் சற்று ஆளுமை குறைந்தாலும் திரும்ப பழைய நிலைமைக்கு வர முடியாத நிலைமைகளும் உருவாவது உண்டு என்பதற்கு கை ரைன்ஹால்டு டானரின் சமகாலத்தவரான சாமுலி பவுலாஹர்ஜு (Samuli Paulaharju ) என்ற பேராசிரியர் சேகரித்த சில தகவல்களில் ஒரு சுவாரசியமான சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம்.


அக்மீலி (Akmeeli) என்ற ஷாமன் பல சடங்குகளில் பாடியபடியே ஓநாயாகவோ, கரடியாகவோ, பறவையாகவோ கூட மாறி தேவையானதைக் கேட்டறிந்து சொல்லி சடங்கு முடிந்த பின்னரும் சில காலம் அந்த விலங்கின உணர்வுகளிலேயே சஞ்சரித்து விடுவதுண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த சமயங்களில் அவனது உடல் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்படும். இது ஷாமனிஸ சக்திகளின் உச்சக்கட்ட ஆளுமையாகக் கருதப்படுகிறது. அவன் எந்த நாளில், எந்த சமயத்தில் எந்த வாக்கியம் சொல்ல வேண்டும் என்று சொல்வானோ அப்படியே அந்த நாளில், அந்த நேரத்தில், அந்த வாக்கியத்தை அவன் உடல் அருகே வந்து சொன்னால் அவன் தன் பழைய உடலுக்கும் உணர்வுநிலைக்கும் திரும்பி வருவான். இந்த அற்புதங்களைப் பலரும் கண்டிருக்கிறார்கள்.

ஒரு முறை அப்படியே வேறொரு விலங்கின உணர்வுக்குப் போகும் முன் அக்மீலி தன் மனைவியிடம் ‘என்னை இந்த வாக்கியம் சொல்லி எழுப்பு” என்று சொல்லி, வாக்கியத்தைச் சொல்ல வேண்டிய நாளையும், நேரத்தையும் சொல்லி விட்டு மத்தளத்தை அடித்து ஆடிப்பாடி மயங்கி விழுந்தான். ஆனால் அந்த நாள், நேரம் வந்த போது அவன் மனைவிக்கு அந்த வாக்கியம் மறந்து போய் விட்டது. என்ன முயற்சி செய்தும் அவளுக்கு அந்த வாக்கியம் நினைவுக்கு வரவில்லை. அக்மீலியும் தன் பழைய உணர்வு நிலைக்குத் திரும்பவில்லை. பின் பிணத்திலிருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்த போது ஊர்க்காரர்கள் வேறு வழியில்லாமல் பிணத்தைப் புதைத்து விட்டார்கள்.

முப்பதாண்டு காலம் கழிந்த பின்னர் ஒரு நாள் சுள்ளி பொறுக்கக் காட்டுக்குப் போன போது அக்மீலியின் மனைவிக்குக் கணவன் சொல்லி விட்டுப் போன அந்த வாக்கியம் நினைவுக்கு வந்தது. கண்களில் நீர் வெள்ளமாகப் பெருக அக்மீலியின் மனைவி தன் கணவனின் கல்லறைக்கு ஓடிப் போய் அழுதபடியே அந்த வாக்கியத்தைச் சொல்லி “எழுந்திரு என் கணவனே” என்று சொல்லியிருக்கிறாள். ஆச்சரியப்படும் விதமாய் அந்தக் கல்லறையில் இருந்து அக்மீலியின் உருவம் பலவீனமாய் எழுந்ததாகவும், அதன் முகவாய்க்கட்டை லேசாய் அசைந்ததாகவும், ஏதோ முணுமுணுத்ததாகவும் சொல்கிறார்கள். சில வினாடிகளில் சடலம் திரும்பவும் அந்தக் கல்லறையிலேயே நொறுங்கி விழுந்ததாகவும் சொல்கிறார்கள். இது கேட்க கர்ணபரம்பரைக் கதை போலவே தோன்றினாலும் ஷாமனிஸ மக்கள் இதை நம்புகிறார்கள். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


சடங்குகளில் மட்டுமே நடத்த வேண்டிய அற்புதங்களை மேலும் நீட்டிச் செல்வது எத்தனை தான் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போல் தோன்றினாலும் ஒரு நாள் ஆபத்திலேயே முடியும் என்பதற்கு இது ஆணித்தரமான உதாரணம் என்று அவர்கள் நினைப்பதாக சாமுலி பவுலாஹர்ஜு எழுதியிருக்கிறார்.


ஷாமனிஸ சடங்குகளில் ஷாமன் அடையும் மாற்றத்தை இருவிதமாகச் சொல்கிறார்கள். பொதுவாக நடப்பது ஷாமன் உணர்வுநிலை கூர்மை பெற்று வேறு உலகங்களிலிருந்தும், பல்வேறு சக்திகளிடமிருந்தும் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கேட்டுத் தெரிந்து கொள்வது தான். ஷாமன் தன் உடல் மீதுள்ள கட்டுப்பாட்டைத் தளர்த்தினாலும், அந்த சக்திகளின் பாதிப்பை தன்னிடம் சிறிது பெற்றாலும் கூட முழுவதுமாக கட்டுப்பாட்டைக் கைவிட்டு விடுவதில்லை. ஆனால் அபூர்வமாக இன்னொரு மாற்றமும் நிகழ்வதுண்டு. அந்த மாற்றத்தில் ஷாமன் தான் தேடும் சக்தியாகவே முழுவதுமாக மாறிவிடுகிறான். கேட்டுத் தெரிந்து கொண்டு சொல்வதற்குப் பதிலாக அந்த சக்தியே அவன் உடலை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்த உயர்சக்திகளின் பிரதிநிதியாக அறிய வேண்டியவற்றை அறிந்து சொல்வதற்குப் பதிலாக அந்த சக்தியாகவே மாறுவது ஆபத்தானது. நோக்கம் நிறைவேறிய பிறகு அந்த சக்தி விலகுவதையும், அதை விலக்க வைக்கும் திறமையை ஷாமன் பெற்றிருத்தலையும் பொறுத்தே அவன் திரும்ப பழைய நிலைமைக்குத் திரும்பி வருதல் சாத்தியமாகிறது. இதற்கு ஆன்ம பலம் அப்பழுக்கில்லாமல் இருக்க வேண்டும். தேவையில்லாமல் சக்திகளுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். தவறினால் திரும்பி வருதல் தடைப்பட்டு விடும். இதுவே அக்மீலி விஷயத்திலும் நடந்திருக்கிறது.


இந்த இரண்டாம் வகை மாற்றங்கள் பெரும்பாலும் ஷாமனிஸத்தில் 19 ஆம் நூற்றாண்டு வரையே அபூர்வமாகவாவது காணப்பட்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் இது போன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுவது வெகுவாகவே குறைந்து பின் இல்லாமல் போயிற்று. முதல் வகை ஷாமனிஸ சடங்குகளில் கூட ஒரு ஷாமன் தக்க சமயங்களில் உதவ ஓரளவு தேர்ச்சி பெற்ற ஒரு உதவியாளரையாவது சடங்குகளின் போது வைத்துக் கொள்ளும் வழக்கம் பின்னர் பல பகுதிகளிலும் ஆரம்பமாகி விட்டது.

அமானுஷ்யம் தொடரும்…..

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி : 8.9.2017


வூடு, அகோரி, ஷாமன் ஆகியவற்றை விளக்கும் “அமானுஷ்ய ஆன்மிகம்” நூல் பிப்ரவரி 2018ல் வெளியாகியுள்ளது. விலை ரூ.100/-






நூல் தங்கள் பகுதியில் எங்கே கிடைக்கும் என்றறிய தினத்தந்தி பதிப்பகத்தை 044-25303336, 044-25303000 எண்களிலோ, mgrthanthipub.dt.co.in மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

ஆன்லைனில் ஆர்டர் செய்ய- http://publication.dailythanthi.com/amanushya-anmiham

Monday, February 26, 2018

சத்ரபதி – 9

யூப்கான் பீதியின் உச்சத்திற்கே போனான். மொகபத்கான் ஜீஜாபாய் சொன்னதை நம்பி அவனைச் சந்தேகப்படுவான் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. பயத்தில் அவன் நாக்கு நகர மறுத்தது. கஷ்டப்பட்டு பலவீனமாகச் சொன்னான். “என்னை சந்தேகிக்காதீர்கள் தலைவரே. இந்தப் பெண் ஒரு மாயக்காரி… இவள் தன் குழந்தையை எங்கோ மறைத்து வைத்திருக்கிறாள்…...”

ஜீஜாபாய் முகத்திலும் குரலிலும் இகழ்ச்சியைக் காட்டிச் சொன்னாள். “ரதத்தை சோதனையிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்”

அந்தச் சிறிய ரதத்தைச் சோதனையிடத் தேவையே இருக்கவில்லை. திரைச்சீலை விலகி, இருந்த ஒரே இருக்கையில் ஒரு பட்டுத்துணிப்பை மட்டுமே தெரிந்தது. தலையணை கீழே விழுந்திருந்தது. அயூப்கான் பதற்றம் அதிகமாகி அந்தப் பட்டுத்துணிப்பையைத் திறந்து உள்ளே குழந்தை இருக்கிறானா என்று பார்த்தான். அங்கே துணிமணிகள் மட்டுமே இருந்தன. அவன் பரிதாபமாகத் திரும்பிப் பார்க்கையில் இகழ்ச்சியுடன் மொகபத்கான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏளனமாக மொகபத்கான் சொன்னான். “ரதத்தின் கூரையிலும் ஏறிப்பார். அங்கே இவள் குழந்தையை வைத்திருந்தாலும் வைத்திருப்பாள்…..”

பீதியுடன் ரதத்தின் உச்சியைப் பார்த்த அயூப்கான் இனி என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பினான். அவள் குழந்தையை பைசாப்பூரிலேயே விட்டு வந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் அவனுக்கு வலுத்தது. அப்படி குழந்தையை அங்கேயே விடுமளவு சந்தேகம் உள்ளவள் எப்படி அவனை நம்பி கூட வந்தாள் என்ற கேள்விக்கு அவனிடம் பதில் இல்லாததால் பரிதாபமாக அவன் நின்றான்.

மொகபத்கான் தன் படைவீரர்களைப் பார்த்துச் சொன்னான். “இருவரையும் சிறைப்படுத்தி வையுங்கள். உண்மை வெளிவருகிறதா என்று பார்ப்போம்…..”


சிந்துகேத் அரண்மனைக்கு லாக்கோஜி ஜாதவ்ராவின் தம்பியும், தற்போதையத் தலைவருமான போத்தாஜிராவ் திடீரென்று வந்து சேர்ந்ததும் உடனடியாகக் காண விரும்பியதும் ஜீஜாபாயின் தாய் மால்சாபாய்க்கு அவசர முக்கியச் செய்தி இருப்பதை உணர்த்தியது. படித்துக் கொண்டிருந்த இராமாயணத்தை மூடி வைத்து விட்டுத் தன் மைத்துனனை வரச் சொன்னார். தாதி சென்று சொன்னவுடன் போத்தாஜிராவ் கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளே நுழைந்தார்.  சொல்லப் போகிற செய்தி சுபமானதல்ல என்பதை உடனே உணர்ந்தார் மால்சாபாய்.

காலைத் தொட்டு வணங்கிய மைத்துனனுக்கு தீர்க்காயுள் வாய்க்க ஆசி சொன்ன மால்சாபாய் ”என்ன செய்தி மைத்துனரே?” என்று கேட்டார்.

“ஜீஜாபாய் மொகபத்கானால் கைது செய்யப்பட்டிருக்கிறாள் அண்ணியாரே”

மால்சாபாய் அதிர்ந்து போனார். அவர் பார்வை சற்று முன் மூடிவைத்த  இராமயண புத்தகத்தின் மீது விழுந்தது. அவரது மகளுக்கும்  சீதாபிராட்டி போல கஷ்டங்கள் தீராமல் வந்து கொண்டிருக்கின்றன….. கண்கள் ஈரமாக, போத்தாஜிராவிடம் சொன்னார். “அமருங்கள் மைத்துனரே. என்ன நடந்ததென விரிவாகச் சொல்லுங்கள்….”

போத்தாஜிராவ் விரிவாகச் சொன்னார். முழுவதையும் கேட்டுவிட்டு மால்சாபாய் தாங்க முடியாத வருத்தத்துடன் சொன்னார். “என் மகள் ஷாஹாஜியை என்றைக்குத் திருமணம் செய்து கொண்டாளோ அன்றிலிருந்தே அவளுக்கு கஷ்டங்கள் ஆரம்பமாகி விட்டன மைத்துனரே. அவன் மறுமணமும் செய்து கொண்டு விட்டான். அவன் மூத்த குழந்தையையும் அவளிடம் அனுப்பி வைக்கவில்லை. இப்போது இரண்டாவது குழந்தையும் அவளுடன் இல்லை. புகுந்த வீட்டின் தயவையும் அவள் விரும்பவில்லை. இப்போது சிறைப்படுத்தப்படும் கொடுமையும் நடந்திருக்கிறது. விதி அவள் வாழ்வில் ஏன் இப்படிச் சதி செய்கிறது என்று எனக்கு விளங்கவில்லை. பிள்ளளைகளுக்கு நேரும் கஷ்டங்கள் பெற்றவர்களை இரட்டிப்பாய் வேதனைப்படுத்துகிறது. வணங்குபவர்களைச் சோதிப்பதில் இறைவனுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை…..”

போத்தாஜிராவ் வேதனையுடன் மௌனமாக இருந்தார். மால்சாபாய் கண்களைத் துடைத்தபடி கேட்டார். “குழந்தை இப்போது எங்கே இருக்கிறது? அயூப்கான் சொல்வது உண்மையா, ஜீஜாபாய் சொல்வது உண்மையா?”

”அயூப்கான் சிறையில் புலம்பிக் கொண்டே இருக்கிறான். நூறு ஷாஹாஜி ஒரு ஜீஜாபாய்க்கு இணையாக மாட்டார்கள். ஜீஜாபாய் அந்த அளவு அபாயமானவள் என்கிறான்…. ஆனால் மாறாக ஜீஜாபாய் அவளது சிறையில் கவலையுடன் இருந்தாலும் அமைதியாகவே இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.   அயூப்கானின் படைவீரர்கள் சொல்வதையும் வைத்துப் பார்க்கையில் அயூப்கான் சொல்வதே உண்மையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் மொகபத்கானோ அவனுடைய அதிகாரிகளோ விசாரிக்கச் செல்லும் போதெல்லாம் ஜீஜாபாய் அவர்களிடம் என் மகன் எங்கே, அவனை என்னிடம் ஒப்படையுங்கள் என்று உருக்கமாய் கேட்டுக் கொள்கிறாள். அதனால் மொகபத்கான் அவளைத் தான் நம்புகிறான். ஜீஜாபாயின் வாதப்படி ஆரம்பத்திலேயே அயூப்கான் மீது அவளுக்குச் சந்தேகமிருக்குமானால் அவள் அவனுடன் கிளம்பியே இருக்க மாட்டாள் என்பதும், வழியில் குழந்தையை அவள் தப்பிக்க வைத்திருக்க வழியே இல்லை என்பதும் மொகபத்கானுக்கு அவள் சொல்வதை நம்ப வைத்திருக்கிறது போலத் தோன்றுகிறது….”

“உண்மையில் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் மைத்துனரே?” மால்சாபாய் குழப்பத்துடன் கேட்டார்.

“அவள் அயூப்கான் சொல்வதை நம்பிக் கிளம்பியிருக்க வேண்டும். கிளம்பும் போது ஏதாவது சந்தேகமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம். முதலில் நாம் போவோம். பாதுகாப்பாய் போய்ச் சேர்ந்து விட்டால் பின் மகனை வரவழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து குழந்தையை அங்கேயே விட்டு வந்திருக்கலாம்….”

“அப்படியானால் குழந்தை தற்போது பைசாப்பூரில் தான் இருக்கிறானா?”

“குழந்தை அங்கேயும் இல்லை என்ற நம்பகமான தகவல் மொகபத்கானுக்குக் கிடைத்திருக்கிறது….. குழந்தை எங்கே என்பது ஜீஜாபாய்க்கு மட்டுமே தெரிந்த தகவலாக இருக்கிறது….. ஆனால் அவள் அடிக்கடி எங்கே என் மகன், அவனைத் தயவுசெய்து என்னுடன் இருக்க விடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாளாம். அதனால் மொகபத்கான் குழம்பிப் போயிருக்கிறான்….”

மால்சாபாயின் முகத்தில் பெருமிதப் புன்னகை மலர்ந்தது. “என் மகள் அழுத்தக்காரி மைத்துனரே. அயூப்கான் அவளைக் குறைத்துச் சொல்லி விட்டான். நூறு ஷாஹாஜி அல்ல ஆயிரம் ஷாஹாஜியும் என் மகளுக்கு இணையாகாது. இதை ஆரம்பத்திலேயே நான் உணர்ந்திருந்தேன். உங்கள் அண்ணாவின் நாக்கில் அந்த ஹோலி நாளில் சனி தங்கியிராவிட்டால் அவள் வாழ்க்கை இப்படி மோசமாகப் போயிருந்திருக்காது. என்ன செய்வது!  பார்க்க அழகாய் இருக்கிறானே ஒழிய ஷாஹாஜிக்கு அறிவு போதாது. அறிவிருந்தால் வலிமையில்லாத நிலையில் இருக்கும் அவன் முகலாயர்களைப் பகைத்துக் கொள்வானா?”

“ஷாஹாஜி பீஜாப்பூர் சுல்தான் தன் பக்கம் இருப்பதால் முகலாயர்களுடன் மோதிப் பார்க்கும் தைரியம் பெற்றிருக்கிறான் அண்ணியாரே”

”அவன் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியிருக்கிறான் மைத்துனரே. பீஜாப்பூர் சுல்தான் பலம் என்ன? முகலாயப் பேரரசின் பலம் என்ன? கடைசியில் பிரச்சினை வந்தால் பீஜாப்பூர் சுல்தான் சற்றும் யோசிக்காமல் ஷாஹாஜியை விட்டு விலகி விடுவான். அது தான் நடக்கப் போகிறது பாருங்கள்……”

போத்தோஜிராவ் மால்சாபாயின் கருத்தில் உடன்பட்டார். முகலாயப் பேரரசின் முழுக்கவனம் ஷாஹாஜியின் மீது திரும்பினால் கண்டிப்பாக ஷாஹாஜியால் தாக்குப்பிடிக்கவே முடியாது….

“ஜீஜாபாய் விஷயத்தில் என்ன செய்வது அண்ணியாரே?” அவர் கேட்டார்.

”மொகபத்கானிடம் பேசுங்கள் மைத்துனரே. ஜீஜாபாய் பெயரளவில் தான் ஷாஹாஜியின் மனைவி என்பதையும் ஷாஹாஜியின் வாழ்க்கையில் ஜீஜாபாய்க்கு இப்போது எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதையும் சொல்லுங்கள். ஜீஜாபாய் சிந்துகேத் அரசவம்சத்தின் மகள் என்பதை நினைவுபடுத்துங்கள்….”

போத்தோஜிராவ் எழுந்தார். பின் மெல்லக் கேட்டார். “நான் ஜீஜாவைச் சந்தித்துப் பேசட்டுமா அண்ணியாரே?”

“வேண்டாம் மைத்துனரே! நம்மை மதிக்காதவர்களை நாமும் சென்று பார்க்க வேண்டியதில்லை…. எட்ட இருந்து கொண்டே அவள் வாழ்க்கையைச் சுலபமாக்குவோம். அது போதும்.” மால்சாபாய் உறுதியாகச் சொன்னார்.


கமதுநகரின் மறைவிடம் ஒன்றில் தங்கியிருந்த ஷாஹாஜி அயூப்கானின் வஞ்சகத்தைக் கேட்டதிலிருந்தே மனம் கொதித்துக் கொண்டிருந்தார். ஒரு கோட்டைத் தலைவனாய் இருப்பவன், ஷாஹாஜியுடன் பல காலம் பழகியும் பணிந்தும் இருந்தவன் இத்தனை நீச்சத்தனமாய் இறங்குவான் என்று ஷாஹாஜி எதிர்பார்த்திருக்கவில்லை. எதோ ஒரு பக்கம் சாய்ந்தாக வேண்டும் என்ற நிலை வந்த போது முகலாயர் பக்கம் அவன் சாய நினைத்ததை ஷாஹாஜி தவறாக நினைக்கவில்லை. ஆனால் அதற்கு அயூப்கான் தேர்ந்தெடுத்த வழி ஒரு வீரன் நினைத்துப் பார்க்கவும் கூசுகிற வழி. ஜீஜாபாய் தான் ஏமாந்து போனாலும் அயூப்கானையும் சிக்க வைத்துப் பழி வாங்கிய விதம் மனக்கொதிப்பை ஓரளவு ஆற வைத்தது. மகனைப் பத்திரமாகத் தன்னுடன் கொண்டு வந்து வைத்துக் கொள்ள வேண்டும், அல்லது பீஜாப்பூரில் சாம்பாஜியுடன் சேர்த்து விட வேண்டும் என்று நினைத்தார். சாம்பாஜி இது வரை தம்பியைப் பார்த்ததும் இல்லை….. ஜீஜாபாயைப் பொறுத்த வரை அவளை முகலாயர்கள் கொடுமைப்படுத்தவோ, கீழ்த்தரமாக நடத்தவோ துணியாதபடி அவளுடைய பிறந்த வீட்டார் பார்த்துக் கொள்வார்கள்…..

பைசாப்பூரில் ரகசியமாக சத்யஜித் சிவாஜியைத் தூக்கிக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பதை அவர் ஆட்கள் தெரிவித்தார்கள். சில நாட்களாகவே ஜீஜாபாய் அவனிடம் தான் மகனை அதிக நேரம் விட்டிருந்தாள் என்றார்கள். அவர் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான வீரர்கள் பலர் இருக்கையில் அவர்களை எல்லாம் விட்டு விட்டு அவரே அதிகம் அறியாத சத்யஜித் என்பவனிடம் சிவாஜியை ஜீஜாபாய் ஒப்படைத்ததில் அவருக்குத் திருப்தி இல்லை…. ஜீஜாபாய் முட்டாள் அல்ல. புத்திசாலி. அதனால் அவள் முழு நம்பிக்கை வராமல் ஒருவனிடம் ஒப்படைத்திருக்க மாட்டாள் என்றாலும் இது தேவையில்லாத சிக்கலாக அவருக்குத் தோன்றியது. சிவாஜி எதிரிகள் கையில் கிடைப்பதற்கு முன் அவனைப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவராக சத்யஜித்தைத் தேடிக் கண்டுபிடித்து சிவாஜியைத் தருவிக்க தன் நம்பிக்கைக்குரிய சிலரை ஷாஹாஜி அனுப்பி வைத்தார்.

(தொடரும்)    
என்.கணேசன்

Thursday, February 22, 2018

இருவேறு உலகம் -71


ன்னிடம் கூட கற்றுக் கொள்ள க்ரிஷ் போன்ற ஜீனியஸ் தயாராக இருந்தது சுரேஷுக்கு வேடிக்கையாகவும் இருந்தது. “சூரியனிடமிருந்து பெற வேண்டியதை மெழுகுவர்த்தியிடமிருந்து ஒருவன் பெற்று விட முடியாது க்ரிஷ்.என்று சொன்னான்.

“சூரியன் இல்லாத போது மெழுகுவர்த்தி உபயோகப்படும்என்று சொல்லி க்ரிஷ் சிரித்தான்.

சூரியன் இல்லாத போது தான். சூரியன் மறைந்திருக்கும் போது அல்ல” என்று சொன்னவன் வேலை இருப்பதாகச் சொல்லி மெல்ல நழுவினான்.

க்ரிஷ் வரவேற்பறையில் இருந்த அலமாரியில் நிறைய புத்தகங்கள் இருப்பதைக் கவனித்தான். எழுந்து போய் அந்தப் புத்தகங்களைப் பார்த்தான். தத்துவ புத்தகங்களில் இருந்து க்வாண்டம் தியரி புத்தகங்கள் வரை பல வகை புத்தகங்கள் அங்கு இருந்தன. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தவன் அந்த நூலில் மூழ்கிப் போனான். அரை மணி நேரம் கழித்து உள்ளே வந்த சுரேஷை அவன் கவனிக்கவில்லை.

இது வரை இங்கு காத்திருந்தவர்கள் அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பதும், சுரேஷைப் பார்ப்பதுமாக இருப்பார்கள். அல்லது மாஸ்டர் அறைக்கதவையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். பொறுமையிழந்து அங்குமிங்கும் நடப்பார்கள். போனில் யாரிடமாவது பேசுவார்கள். மறுபடி கடிகாரத்தைப் பார்ப்பார்கள்…. க்ரிஷ் தான் முதல் விதிவிலக்காக இருந்தான். 

மேலும் ஒரு மணி நேரம் கழித்து மாஸ்டர் தியானத்திலிருந்து வெளி வந்தது கூட அவனுக்குத் தெரியவில்லை. மாஸ்டர் புன்னகையுடன் “ஜே. க்ரிஷ்ணமூர்த்தி என்ன சொல்றார்” என்று கேட்ட போது தான் அவன் தலை நிமிர்ந்தான். அவரைப் பார்த்து புன்னகை செய்து விட்டு மீண்டும் புத்தகத்திற்குப் பார்வையைத் திருப்பி, படித்துக் கொண்டிருந்த வாக்கியத்தை சில வினாடிகளில் முடித்து விட்டு, புத்தகத்தை மடித்து எழுந்து சென்று அலமாரியில் அதே இடத்தில் வைத்து விட்டு அவன் அவரருகே உட்கார்ந்தான்.

“ஜே. க்ரிஷ்ணமூர்த்தி நாம உலகத்தைப் பார்க்கிற விதமே தப்புங்கறார்”

“அப்புறம் எப்படிப் பார்க்கணுமாம்?”

“பழைய அனுமானங்களை ஒதுக்கி வச்சுட்டு பார்க்கணுமாம். இல்லாட்டி புதுசான விஷயங்களைக் கூடப் பழைய விதங்களுக்கு மாத்தித் தப்பா புரிஞ்சுக்குவோம்கிறார். ஒவ்வொரு கணமும் புதுசா குழந்தையோட பார்வைல உலகத்தைப் பார்க்கச் சொல்றார்….”

மாஸ்டர் புன்னகையோடு அவனைப் பார்த்தார். காத்திருந்த சலிப்போ, பொறுமையின்மையோ சுத்தமாய் அவனிடம் தெரியவில்லை. “சரி என்ன திடீர்னு…?” என்று கேட்டார்.

“நான் எப்போல இருந்து உங்க கிட்ட கத்துக்க வரலாம்னு கேட்டுட்டு போக வந்தேன்”

“புதன்கிழமை காலைல நாலு மணிக்கு ஆரம்பிக்கலாம்….. இதைப் போன்ல கேட்டிருக்கலாமே”

“வேறயும் சிலது கேட்க வேண்டியிருந்துச்சு அதான் நேர்லயே வந்தேன்…. மாஸ்டர் நீங்க உங்க யோகசக்திகளை எல்லாம் யார் கிட்ட இருந்து கத்துகிட்டீங்க?”

“என் குரு கிட்ட இருந்து…..”

“ஒரே குரு கிட்ட இருந்தா, இல்லை பல குருமார்கள் கிட்ட இருந்தா?”

“ஒரே குரு கிட்ட இருந்து தான்.”

“உங்க குரு கிட்ட இருந்து உங்க அளவுக்கு அல்லது உங்களை விட அதிகமா கத்துகிட்ட சிஷ்யர் யாராவது இருக்காங்களா?”

மாஸ்டருக்கு உண்மையே சொல்ல வேண்டி வந்தது. “அப்படி சொல்ற அளவுக்கு கத்துகிட்டவங்கள நான் கவனிச்சதில்லை. எனக்கு என் ஞானம் மாத்திரம் தான் முக்கியமா இருந்தது. மத்தவங்களைக் கவனிக்கற பழக்கமோ ஒப்பிட்டுப் பார்க்கற அவசியமோ இருக்கல”

                                                  
“உங்களையும் விட அதிகமாய் கத்துகிட்ட சக்தி வாய்ந்த ஆள்கள் இருந்தாங்கன்னா அவங்க யார் கிட்ட இருந்து கத்துகிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறீங்க?”

”இதுக்குப் பதில் சொல்றது கஷ்டம். எத்தனையோ பேர்கள் கிட்ட இருந்து கத்துகிட்டிருக்கலாம்….. ஏன் இதைக் கேட்கிறாய்?”

“ஒரு ஆளைக் கண்டுபிடிக்கணும். அந்த ஆள் ரொம்பவே சக்தி வாய்ந்தவன்கிறதைத் தவிர எனக்கு வேற தகவல் எதுவும் தெரியாது. அந்த ஆள் யார் கிட்ட அந்த யோக சக்திகள் படிச்சிருக்கலாம்னு தெரிஞ்சா அந்தக் குரு மூலமா அந்த ஆளைக் கண்டுபிடிக்கலாம்னு யோசிக்கிறேன். இது கொஞ்சம் சுத்தி வளைச்சுட்டு பார்க்கிற வழி தான். ஆனா வேற வழி தெரியாததால தான் கேட்கறேன்….. உங்க குரு மாதிரி அல்லது அவரை விடவும் அதிகமா தெரிஞ்சு கத்துத் தர்ற குருமார்கள் சுமார் எத்தனை பேர் இருப்பாங்க?’”

“எனக்குத் தெரிஞ்சு நம்ம நாட்டில் சுமார் நாலைந்து பேர் இருப்பாங்க”

“அவங்கள பத்திச் சொல்லுங்க மாஸ்டர் நான் குறிச்சிக்கறேன்…..”

அவன் எதிரியை அறிய வேண்டித்தான் கேட்கிறான் என்று அவருக்குப் புரிந்தது. எதிரி அவனுடைய ஏலியன் நண்பன் தான் என்பதை உறுதியாக நம்பிக் கொண்டிருந்த அவர் அவனுடைய முயற்சி வீண் முயற்சி என்று தெரிவிக்க நினைத்தார். அவர் எப்படி எதிரி அவன் ஏலியன் நண்பன் என்று உறுதியாக நம்புகிறாரோ அதே போல் அவன் எதிரி வேறு யாரோ என்று உறுதியாக நம்புகிறான். அதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்ள மாட்டான் என்பது புரிந்ததால் அவன் திருப்திக்கு, கேட்டதற்கான பதிலைச் சொல்லி விட நினைத்தார்.

“மவுண்ட் அபுல ஒரு யோகி இருக்கார். ரிஷிகேஷ்ல ஒரு குரு ஆசிரமம் நடத்திட்டு வர்றார். மவுண்ட் கைலாஸ்ல ஒரு தவசி இருக்கார். தார்ப் பாலைவனத்துல ஒரு பக்கிரி இருக்கார். திருவண்ணாமலைல மலை மேல் ஒரு சித்தர் சுத்திகிட்டிருக்கார். இவங்க எல்லாம் எனக்குத் தெரிஞ்சு நிறைய சக்திகள் படைச்சவங்க, அதை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறவங்க”

“அவங்கள சந்திக்க விலாசம் ஏதாவது தர முடியுமா?”

“மவுண்ட் கைலாஸ்ல இருக்கிற தவசிக்கும், திருவண்ணாமலை மேல் இருக்கிற சித்தருக்கும் நிரந்தரமான இடம் கிடையாது. சுத்திகிட்டே இருக்கறவங்க. தானா யார் கண்ணுக்கும் பட மாட்டாங்க. அவங்களா மனசு வெச்சா தான் கண்ணுக்கே தெரிவாங்க. பேசுவாங்க. மத்த மூணு பேரும் ஒரே இடத்துல தங்கி சிஷ்யர்களை ஏத்துக்கறவங்க. அவங்க விலாசம் சொல்றேன். எழுதிக்கோ”.

அவர் சொல்லச் சொல்ல அவன் எழுதிக் கொண்டான். பின் அந்தக் காகிதத்தை மடித்து சட்டைப் பையில் வைத்து விட்டுச் சொன்னான். “அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம்…”

“என்ன?”

“என் ஹரிணிக்கு உங்களை ஒரு தடவ பார்த்துப் பேசணுமாம்” சொல்லும் போதே அவன் குரல் மென்மையாகியது. ‘என் ஹரிணி’ என்று உரிமையோடும் காதலோடும் சொன்ன விதத்தைக் கவனித்த மாஸ்டர் புன்னகையை அடக்கிக் கொண்டார். “கூட்டிட்டு வாயேன்”

“அவளுக்கு நான் இல்லாமல் தனியா உங்களைப் பார்த்துப் பேசணுமாம்….”

“சரி நாளைக்கு காலைல பதினோரு மணிக்கு வரச் சொல்லு”

“நன்றி மாஸ்டர்….” என்றவன் சின்னத் தயக்கத்துடன் அவரைப் பார்த்தான்.

“இன்னும் என்ன என்பது போல அவர் அவனைப் பார்த்தார். அவன் தயக்கத்துடன் சொன்னான். “அவள் கொஞ்சம் வெளிப்படையாய் தைரியமாய் பேசற ரகம். சுத்தி வளைச்சிப் பேச மாட்டா. சரின்னு தோணினதை பட்டுன்னு உடைச்சி பேசறப்ப யார்கிட்ட பேசறோம்கிறது கூட சில சமயம் அவளுக்கு ஒரு பொருட்டா படாது. ஒருவேளை ஏதாவது தப்பா சொல்லிட்டா நீங்க எனக்காக அவளை மன்னிச்சிடணும்…..”

மாஸ்டருக்கு இப்போது புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. குறும்பாகச் சொன்னார் “சரி. அடிச்சா கூட கோவிச்சுக்க மாட்டேன்….. போதுமா”

“ஐயையோ அவ அப்படி மரியாதைக் குறைவா எல்லாம் நடந்துக்க மாட்டா….” என்று க்ரிஷ் வெகுளியாய் அவரிடம் அவசரமாய் சொன்ன போது அவர் வாய் விட்டுச் சிரித்தார்.


ர்ம மனிதன் எகிப்துக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன் அத்தியாவசியம் என்று நினைத்தால் ஒழிய எந்த வேலைக்கும் நேரடியாகப் போவதில்லை. அவனுக்கு உலக நாடுகள் எங்கும் ஆட்கள் இருந்தார்கள். எல்லோரும் திறமையானவர்கள். தங்கள் வேலைகளைக் கச்சிதமாய் செய்யக்கூடியவர்கள். அவர்களுக்கு வேறெங்கும் கிடைக்க முடிந்த தொகையை விட மூன்று மடங்கு பணம் தருகிறான். அவனிடம் விசுவாசமும், வேலையில் கச்சிதத்தன்மையும் மட்டுமே அவன் எதிர்பார்த்தான். இந்த இரண்டுமே நூறு சதவீதம் இருக்கும் வரை அவன் அவர்கள் ராஜவாழ்க்கை வாழ்வதற்கான பணம் தருவான். இரண்டில் ஒன்றில் குறைபாடு வந்தாலும் மரணம் மட்டுமே அவர்களுக்கு அவனிடமிருந்து கிடைக்கும் கடைசிப் பரிசாக இருக்கும்…. அது அவனிடம் வேலை பார்க்கும் அனைவரும் நன்றாகவே அறிந்திருந்தார்கள். பணத்திலும், உயிரிலும் ஆசை இருந்ததால் மிகச்சரியாகவே நடந்து கொண்டார்கள்.

இப்போது போகும் வேலையையும் கச்சிதமாக எகிப்தில் உள்ள ஆள் செய்வான் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. ஆனால் சில முக்கியத் தகவல்கள் அவன் ஆட்களுக்குத் தெரிவதில் கூட அவனுக்கு விருப்பமில்லை. அதனால் தான் இந்த வேலைக்கு அவனே நேரில் போகிறான். அவன் சட்டைப் பையில் வாரணாசி காளி கோயிலில் இருந்து எடுத்த வரைபடம் பத்திரமாக இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, February 21, 2018

முந்தைய சிந்தனைகள் - 29

சிந்திக்க சில செய்திகள் என் நூல்களிலிருந்து.....










என்.கணேசன்

Monday, February 19, 2018

சத்ரபதி – 8

வெளியே ஜீஜாபாய் வந்த போது ஷாஹாஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அங்கே இருந்த வீரர்களிடம் ஜீஜாபாயிடம் சொன்ன கதையையே அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்களில் யார் ஜீஜாபாய் கூட வந்தாலும் முகலாயர்கள் சந்தேகம் கொள்வார்கள் என்பதால் தான் ஷாஹாஜியும் ஆள் அனுப்பவில்லை என்றும், இங்கிருக்கும் ஆட்களை உடன் அழைத்து வர வேண்டாம் என்றும் ஷாஹாஜி கூறியதாகச் சொன்னான்.  மிக அதிகமான ஆட்களோடு அயூப்கானே போனாலும் சந்தேகம் வரலாம் என்பதால் குறைவான எண்ணிக்கை ஆட்களோடு பயணிக்க ஷாஹாஜி தன்னைப் பணித்தார் என்றும் சொன்னான். இதற்கு முன் அவன் எந்த தில்லுமுல்லிலும் ஈடுபட்டிருக்காததால் அவன் மேல் அவர்களுக்கும் சந்தேகம் வரவில்லை. அயூப்கான் யோசனையோடு நாளை மொகபத்கான் படை அங்கே வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை சொன்னான். அவன் பேசிய விதத்தில் நாளை மொகபத்கான் படை அங்கே வருவது உறுதி என்றே அவர்களும் நம்பினார்கள்.

வெளியே வந்த ஜீஜாபாயைப் பார்க்கையில் அவள் தோளில் சிவாஜிக்குப் பதில் தலையணை இடம் மாறியிருப்பது அயூப்கானுக்குத் தெரியவில்லை. தாயின் தோளிலேயே குழந்தை உறங்கி விட்டான் என்று தான் நினைத்தான். ஜீஜாபாய் அங்கிருந்த தன் வீரர்களிடமும், பணியாட்களிடமும் விடை பெற்றாள். அவர்களுக்கு மத்தியில் நின்றிருந்த சத்யஜித்தைப் பார்த்தபடியே எல்லோரிடமும் பொதுவாகச்  சொல்வது போல் சொன்னாள். “உங்களை நம்பித் தான் விட்டுப் போகிறேன்.  பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்….”

சத்யஜித் புரிந்து கொண்டான். எல்லோரும் தலையசைக்கையில் அவனும் தலையசைத்தான். அயூப்கான் கொண்டு வந்திருந்த சிறிய ரதத்தில் ஜீஜாபாய்  ஏறிக் கொண்டாள். முன்னால் சில குதிரை வீரர்கள், பின்னால் அயூப்கான், அதன் பின் ரதம், அதற்கும் பின் சில குதிரை வீரர்கள் என வரிசையாக பைசாப்பூரை விட்டுச் சென்றார்கள். ரதத்தின் திரைச்சீலையை விலக்கி தொலைவிற்கு நகரும் கோட்டையையே பார்த்துக் கொண்டிருந்த ஜீஜாபாய் தன் மனதில் பெரும் கனத்தை உணர்ந்தாள். அவள் உள்ளம் சிவாஜிக்காகப் பிரார்த்திக்க ஆரம்பித்தது.

அவர்கள் சென்று சிறிது நேரம் கழித்து சத்யஜித் உள்ளே நுழைந்த போது சிவாஜி தாய் நிற்க வைத்த இடத்திலேயே நின்றிருந்தான். “அம்மா போய் விட்டார்களா மாமா” என்று தாழ்ந்த குரலில் சத்யஜித்திடம் கேட்டான்.  “போய் விட்டார்கள் பிரபு” என்று கூறியபடியே சிவாஜியைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு சத்யஜித்தும் கிளம்பினான். அவன் முகத்தில் கவலையைக் கவனித்த சிவாஜி சொன்னான். “கவலைப்படாதீர்கள் மாமா. அம்மாவுடனும் கடவுள் இருக்கிறார்…..”

சத்யஜித்துக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது விளங்கவில்லை. அவன் மனம் ஜீஜாபாய் ஏன் சிவாஜியையும் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை என்ற கேள்வியிலேயே நின்றிருந்தது. ஏதேனும் சந்தேகம் வந்திருக்க வேண்டும். அதனால் தான் அப்படிச் செய்திருக்கிறாள். ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று முதலிலேயே ஜீஜாபாய் அவனிடம் சொல்லி இருந்தாள். அந்த நேரத்தில் எதையும் தெரிவிக்கவும் நேரமிருக்காது என்பதால் அவள் சிவாஜியை மட்டும் எப்படியாவது எடுத்துச் சென்று விட வேண்டும் என்றும் சகாயாத்திரி மலைத்தொடருக்குச் சென்று விடும்படியும் முன்பே கூறியிருந்தாள். நிலைமை சரியாகும் தகவல் தெரிந்த பிறகு அவனைக் கொண்டுவந்து ஒப்படைத்தால் போதும் என்று சொல்லி இருந்தாள். அவனைச் சொந்தக் குழந்தையைப் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கண்கலங்க வேண்டியிருந்தாள்….

இப்போதிருக்கும் நிலைமை ஆபத்தானதா, இல்லை உண்மையிலேயே ஷாஹாஜியின் பாதுகாப்புள்ள இடத்திற்குப் போகும் ஆபத்தில்லாத நிலைமையா என்று தெரியாத இரண்டும் கெட்டான் நிலைமை. அதனால் முதலில் மறைவான ஒரு இடத்தில் போய் இருந்து கொண்டு நிலவரம் என்ன என்பதைச் சரியாகத் தெரிந்து கொண்டு சிவாஜியைக் கொண்டு போய் ஜீஜாபாயுடன் சேர்ப்பதா இல்லை சகாயாத்திரி மலைத்தொடருக்குப் போய் விடுவதா என்று தீர்மானிப்போம் என்று நினைத்தவனாக சத்யஜித் பைசாப்பூர் கோட்டையை விட்டு சிவாஜியுடன் வெளியேறினான்.



மொகபத்கான் முன் அயூப்கான் வெற்றிப்புன்னகையுடன் போய் நின்ற போது மொகபத்கான் அலட்சியமாக “மறுபடியும் என்ன?” என்பது போல் பார்த்தான்.

அயூப்கான் சொன்னான். “தலைவரே. ஷாஹாஜியின் மனைவி ஜீஜாபாயும், அவன் குழந்தையும் வெளியே ரதத்தில் இருக்கிறார்கள். அவர்களைச் சிறைப்பிடித்து என்னை உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.”

மொகபத்கான் திகைத்தான். விளையாட்டாய் இவனிடம் சொன்னால் அதைச் சாதித்து விட்டே வந்திருக்கிறானே! ஆள் திறமையானவனாய் தான் இருக்கிறான் என்று மனதினுள் நினைத்துக் கொண்டாலும் அதை வெளியே சொல்லாமல் அலட்சிய தொனியிலேயே தொடர்ந்து கேட்டான். “ஆள் மாறிக் கூட்டிக் கொண்டு வந்து விடவில்லையே?”

“தலைவரே. ஜீஜாபாயை நேரில் பார்த்திருக்கும் ஆட்கள் உங்கள் படையிலேயே நிறைய பேர் இருக்கிறார்கள். ஆள்மாற்றம் செய்து கூட்டி வந்து தங்கள் பகையைச் சம்பாதிக்கும் அளவு நான் முட்டாள் அல்ல” என்று சொல்லிவிட்டு அயூப்கான் ”வந்து பாருங்கள் தலைவரே” என்றான்.

அயூப்கானுடன் தன்னுடைய கூடாரத்தை விட்டு வெளியே வந்த மொகபத்கான் வேகமாக ரதத்தை நோக்கிச் சென்றான்.

ரதத்தின் திரைச்சீலையை விலக்கி அயூப்கானும், மொகபத்கானும் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜீஜாபாய் விதியை நொந்து கொண்டிருந்தாள். தான் ஏமாற்றப்பட்டு விட்டதைப் பாதி வழியிலேயே அவள் யூகித்து விட்டிருந்தாள். பைசாப்பூர் கோட்டையை விட்டு வெளியே வந்த பிறகு சிறிது தூரம் வரை அவள் ரதத்துக்கு முன்பே சென்று கொண்டிருந்த அயூப்கான் வழியில் அவர்கள் இரண்டு  இடங்களில் நிறுத்தி இளைப்பாறிய சமயங்களில் அவளுடன் பேசுவதைத் தவிர்க்க தொலைவிலேயே இருந்தான். பேச்சை மட்டுமல்லாமல் அவள் பார்வையையும் அவன் தவிர்த்தான். அப்போதே யூகித்தாலும்  வழியில் அவள் அவர்களிடமிருந்து தப்பிக்க வழியில்லை. எப்படியோ கடைசி நேரத்தில் சிவாஜியை உடன் எடுத்து வருவதைத் தவிர்த்து அவனைக் காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தி மட்டும் அவளுக்கிருந்தது….

அவர்கள் இருவரும் நெருங்கிய போது ரதத்திலிருந்து கீழே இறங்கிய ஜீஜாபாய் கண்களில் தீப்பந்தங்கள் எரிய அயூப்கானிடம் கேட்டாள். “எங்கே என் குழந்தை?”

அயூப்கான் முகத்தில் குழப்பம் தெரிந்தது. “நீ தானே குழந்தையை வைத்திருந்தாய்?”

“ஆமாம். பைசாப்பூரை விட்டு வரும்போது நான் தான் வைத்திருந்தேன்…. பாதி வழியில் வரும் போது குடிக்க உன் ஆட்கள் நீரைக் கொடுத்தார்களே. அதைக்குடித்து மயங்கியவள் இப்போது தான் விழித்தேன்….. எழுந்து பார்த்தால் என் மடியில் என் குழந்தைக்குப் பதிலாக ஓரு தலையணை இருக்கிறது. எங்கே என் குழந்தை?”

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அயூப்கான் தன் குதிரை வீரர்களைப் பார்த்தான். அவர்களும் திகைப்புடன் விழித்தார்கள்.

மொகபத்கான் சந்தேகத்துடன் அயூப்கானைக் கேட்டான். “என்ன நடக்கிறது இங்கே?”

ஜீஜாபாய் மொகபத்கானை முதல் முறையாகப் பார்க்கிறாள் என்றாலும் அவன் யாரென்று யூகிக்க அவளுக்கு நிறைய நேரம் பிடிக்கவில்லை. அவள் அயூப்கானிடம் அலட்சியமாகக் கேட்டாள். “இந்த ஆள் தான் நீ சொன்ன அற்பப்பதரா?”

மொகபத்கான் சினம் கொண்டு ஜீஜாபாயைக் கேட்டான். “என்ன சொன்னான் இவன்?”

ஜீஜாபாய் சொன்னாள். “உங்களைப் பற்றி நிறைய மோசமான வார்த்தைகளைச் சொன்னான். அதையெல்லாம் ஒரு பெண்ணாகிய நான் என் வாயால் சொல்லக்கூடாது. அவன் சொன்ன வார்த்தைகளிலேயே மிகவும் கண்ணியமாக இருந்தது இந்த அற்பப்பதர் தான்…..”

மொகபத்கான் சினம் அதிகமாகி அயூப்கானைப் பார்க்க அயூப்கான் ஆபத்தை உணர்ந்து அலறினான். “தலைவரே. இவள் பொய் சொல்கிறான்…”

ஜீஜாபாய் அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள். “நான் வணங்கும் ஷிவாய் தேவி மீது சத்தியமாகச் சொல்கிறேன். இவன் உங்களை அற்பப்பதர் என்று தான் சொன்னான். இவனை அல்லா மீது ஆணையாக இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்….”

அயூப்கான் என்ன சொல்வதென்று அறியாமல் திணறி விட்டு அவசரமாகச் சொன்னான். “இவள் குழந்தையை மறைத்து விட்டு உங்களை திசை திருப்ப இதைச் சொல்கிறாள் தலைவரே”

ஜீஜாபாய் கோபத்தோடு அயூப்கானிடம் சொன்னாள். “நீ வந்து என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது என் குழந்தை ஓடி வந்து என் மடியில் அமர்ந்தான். அதை மறுக்கிறாயா?”

“இல்லை…”

“என் குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு உடைகளை எடுத்து வந்தேன். அதை மறைக்கிறாயா?”

“இல்லை….. ஆனால் நீ உடைகளை எடுத்துக் கொள்ளப் போன போது குழந்தையை அந்த அறையில் விட்டு வந்திருக்க வேண்டும்…..”

“நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?”

“என் மீது உனக்குச் சந்தேகம் வந்திருக்க வேண்டும்…. அதனால் தான்.”

“அப்படி உன் மீது சந்தேகம் வந்திருந்தால் நானே ஏன் உன்னுடன் வந்தேன்?”

அயூப்கானுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மொகபத்கான் கோபத்துடன் சந்தேகமும் சேர அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜீஜாபாய் அவன் பேச்சிழந்து நின்ற சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாள். ”புரிகிறது. நான் பருகிய நீரில் மயக்க மருந்தைக் கலந்து தந்து நான் மயங்கி இருந்த நேரத்தில் என் குழந்தையை நீ எடுத்து அதற்குப் பதிலாகத் தலையணையை வைத்திருக்கிறாய். அது தான் ஏன் என்று புரியவில்லை…… உண்மையைச் சொல்….. என்னை இங்கே ஒப்படைத்து ஒரு சன்மானமும், என் மகனை என் கணவரிடம் ஒப்படைத்து அதற்கு ஒரு சன்மானமும் வாங்க நினைத்திருக்கிறாயா....”

அயூப்கான் அவளைக் கிலியுடன் பார்த்தான். மொகபத்கான் பயமுறுத்தும் அமைதியுடன் சொன்னான். “அப்படித்தான் இருக்க வேண்டும்…..”

(தொடரும்)
என்.கணேசன்  


Saturday, February 17, 2018

தினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக வெளியிட்டிருக்கிறது.

அமானுஷ்ய சக்திகளும், ஆன்மிகமும் பண்டைய காலத்திலேயே பின்னிப் பிணைந்தவையாக இருந்தன. தங்களுக்கு மீறிய சக்திகளை எல்லாம் இறைசக்தியாகவே பார்த்து, இறைவன் தந்ததாகவே பாவித்து அமானுஷ்ய சக்திகளை ஆன்மிகத்தின் ஒரு முக்கிய பாகமாகவே அக்காலத்தில் இருந்தே மனிதர்கள் கருதி வந்தார்கள். ஆபத்துக் காலங்களில் தங்களைக் காப்பாற்றவும், தேவையான சமயங்களில் தங்களை வழிநடத்தவும், இறைவழிபாடு நடத்தி அந்தச் சக்திகளைப் பெற்றுக் கொண்டார்கள். உலகின் பல பகுதிகளிலும் பெயர்கள், முறைகள், வழிகள் வேறுபட்டாலும் ஆன்மிகமும், அமானுஷ்ய சக்திகளும் அவற்றின் அடிப்படை அம்சங்களாக இருந்தன. இந்த அமானுஷ்ய ஆன்மிகம் நூல் அவற்றில் மூன்று ஆன்மிக வழிமுறைகளையே விரிவாக விளக்குகின்றது.

இந்த நூலில் விளக்கப்படும் வூடூ, அகோரி, ஷாமனிஸம் என்ற மூன்றைக் குறித்தும் தமிழில் சிறு கட்டுரைக் குறிப்புகள் இருக்கலாமே ஒழிய, விரிவாக இது வரை எழுதப்பட்டதில்லை.  இவை பொருள் பொதிந்தவை, மிக சுவாரசியமானவை, இந்த வழிமுறைகளில் சிந்திக்க வைக்கும்  மெய்ஞானமும், வாழ்க்கைக்கு உதவும் அம்சங்களும், உளவியல் ரீதியான உண்மைகளும் புதைந்து கிடக்கின்றன. இது தினத்தந்தியில் தொடராக வெளிவந்த போது பல தரப்பு மக்களின் பாராட்டைப் பெற்றது. இந்த அரிய கட்டுரைகளை ஆன்மிகத்திலும் அமானுஷ்ய சக்திகளிலும் ஈடுபாடுள்ள அனைவருக்கும் என்றென்றும் பயன்படும்படியாக நூலாகவும் வெளியிட முன்வந்த தினத்தந்தி பதிப்பகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

நூலின் விலை ரூ.100/- 


நூல் தங்கள் பகுதியில் எங்கே கிடைக்கும் என்றறிய தினத்தந்தி பதிப்பகத்தை 044-25303336, 044-25303000, 72999 90399 எண்களிலோ, mgrthanthipub.dt.co.in மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

ஆன்லைனில் ஆர்டர் செய்ய- http://publication.dailythanthi.com/amanushya-anmiham

நன்றி.

அன்புடன்
என்.கணேசன்